செஸ் ஒலிம்பியாட் 2026: இந்தியா முதல் சுற்றில் அபார வெற்றி.. பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வு
செஸ் ஒலிம்பியாட் 2026: இந்தியா முதல் சுற்றில் அபார வெற்றி.. பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வு
உஸ்பெகிஸ்தான்: 2026 செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் டி. குகேஷ் மற்றும் கோனெரு ஹம்பி ஆகியோர் தங்களது பிரிவுகளில் வெற்றிகளைப் பதிவு செய்து இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளனர்.
பொதுப் பிரிவில் தாய்லாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் சுற்று ஆட்டம் பெரும்பாலும் வீரர்களின் தரவரிசைப்படியே அமைந்தது. தங்களை விடக் குறைந்த தரவரிசை கொண்ட வீரர்களை எதிர்கொண்ட குகேஷ், நிஹால் மற்றும் விதித் ஆகியோர் எளிதான வெற்றிகளைப் பெற்றனர். இருப்பினும், 2759 ரேட்டிங் கொண்ட அர்ஜுன், வெள்ளை நிற காய்களுடன் விளையாடி, தாய்லாந்தின் 2363 ரேட்டிங் கொண்ட சர்வதேச மாஸ்டர் பிரின் லாவோஹாவிராபாப்பிடம் 54 நகர்வுகளில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பிரின் லாவோஹாவிராபாப், அர்ஜுனுக்கு கடுமையான சவாலை அளித்து படிப்படியாக ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். அர்ஜுனின் ராஜா பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து வீரர் தனது ராணி மற்றும் யானையை பயன்படுத்தி அடுத்தடுத்து செக் வைத்து அர்ஜுனை தற்காப்பு நிலையில் வைத்தார்.
இறுதியில்அர்ஜுன் தோல்வியை ஒப்புக்கொண்டார். இரு வீரர்களுக்கும் இடையே 396 புள்ளிகள் தரவரிசை வித்தியாசம் இருந்த நிலையில், இந்த ஆட்டம் இந்த சுற்றின் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.மறுபுறம், கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய நிஹால் சரின், எஃப்எம் தனடோன் குல்ப்ருயேதானோனுக்குஎதிரான ஆட்டத்தை 28 நகர்வுகளில் முடித்து வெற்றி பெற்றார்.
அதேபோல், கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கிய விதித் குஜராத்தி, துப்ஃபா கும்நோர்கேவை வீழ்த்த 30 நகர்வுகளை எடுத்துக் கொண்டார். இந்த ஆட்டம் 30.Nxf2 என்ற நகர்வுக்குப் பின் முடிவுக்கு வந்தது.உலக சாம்பியனான குகேஷ், ஃபாரிஸ் ரஷித் அல்ரியாமியை வெள்ளை நிற காய்களுடன் எதிர்கொண்டு 37 நகர்வுகளில் வெற்றியைப் பதிவு செய்தார். இதன் மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி முதல் சுற்றை வெற்றிகரமாகக் கடந்தது. முதல் சுற்றில் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் அர்ஜுன், நிஹால், குகேஷ் மற்றும் விதித் ஆகியோர் களம் கண்டனர்.
பெண்கள் பிரிவில் இந்திய அணிக்கு எந்தவொரு சவாலும் இருக்கவில்லை. டொமினிகன் குடியரசுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி 4-0 என்ற கணக்கில் முழுமையான வெற்றியைப் பதிவு செய்தது.
முதல் சுற்றில் திவ்யா தேஷ்முக்கிற்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ஹம்பி, வைஷாலி, வந்திகா மற்றும் சவிதா ஆகிய நால்வர் இந்திய அணியின் விளையாடும் அணியாகக் களம் கண்டனர்.கடந்த 2024 ஆம் ஆண்டு புடாபெஸ்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரில் பொது மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கம் வென்று நடப்பு சாம்பியனாக இந்திய அணி இந்தத் தொடரில் களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.