📅 Thursday, 09 July 2026 IST | ஆனி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 05, 2026 11:00 AM

வைபவ் சூர்யவன்ஷி உருக்கமான பதிவு.. "நெகிழ்ந்து போயிருக்கிறேன்.. எப்போது வாய்ப்பு கிடைத்தாலும்.."

வைபவ் சூர்யவன்ஷி உருக்கமான பதிவு.. "நெகிழ்ந்து போயிருக்கிறேன்.. எப்போது வாய்ப்பு கிடைத்தாலும்.."

வைபவ் சூர்யவன்ஷி உருக்கமான பதிவு.. "நெகிழ்ந்து போயிருக்கிறேன்.. எப்போது வாய்ப்பு கிடைத்தாலும்.."

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் களம் இறங்கிய 15 வயதான இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அறிமுகப் போட்டிக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் பரவி வருகிறது.

மான்செஸ்டரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியில் 15 ஆண்டுகள் மற்றும் 99 நாட்களில் களம் இறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இந்தியாவின் மிக இளைய சர்வதேச வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய அவர் 10 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 14 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போதிலும், வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகமே அன்றைய நாளின் மிகப்பெரிய சமூக வலைதள பேச்சாக இருந்தது.

இந்தப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் நீல நிற ஜெர்சியை அணிந்திருக்கும் தனது புகைப்படத்தைப் பகிர்ந்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைபவ் சூர்யவன்ஷி எழுதியதாவது, "அனைவரது வாழ்த்துச் செய்திகளாலும் நான் நெகிழ்ந்து போயுள்ளேன். எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் எனது நலவிரும்பிகளுக்கும், மூத்த வீரர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். எனது நாட்டிற்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாகக் கருதுகிறேன். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் எனது அணியின் வெற்றிக்காக எனது சிறந்த பங்களிப்பை எப்போதும் வழங்குவேன். அனைவருக்கும் நன்றி" என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த உணர்ச்சிப்பூர்வமான பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் வேளையில், அவரது எதிர்காலம் சிறக்க தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர். இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 190/7 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, ஜேகப் பெத்தேலின் அதிரடியான ஆட்டத்தால் (76 ரன்கள்) 19 ஓவர்களிலேயே 191/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.