துலீப் கோப்பை: தோனி கூட இல்ல.. இசான் கிஷன் மாபெரும் சாதனை.. முதல் விக்கெட் கீப்பர் என பெருமை
துலீப் கோப்பை: தோனி கூட இல்ல.. இசான் கிஷன் மாபெரும் சாதனை.. முதல் விக்கெட் கீப்பர் என பெருமை
சென்னை : துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் ஈஸ்ட் ஜோன் அணியின் கேப்டன் இசான் கிஷன் 250 ரன்கள் அடித்திருப்பதன் மூலம் துலீப் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஒருவர் 250 ரன்கள் கடப்பது இதுவே முதல் முறையாகும். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயதான இடதுகை பேட்ஸ்மேனான இஷான் கிஷன், இச்சாதனையைப் படைத்து சரித்திரப் பக்கங்களில் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சவுத் ஜோன் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் துலீப் கோப்பை 2026 இறுதிப் போட்டியில், ஈஸ்ட் ஜோன் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் விளையாடி வருகிறார். முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய அவர், 301 பந்துகளில் 250 ரன்கள் குவித்து, பின்னர் 'ரிட்டையர்ட் அவுட்' முறையில் களத்தை விட்டு வெளியேறினார்.
சேப்பாக்கம் மைதானத்தில் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் அவர் வெளியேறுவதற்கு முன், 27 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை விளாசினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு குமார் குஷாக்ராவுடன் (101) இணைந்து 287 பந்துகளில் 230 ரன்களும், ஆறாவது விக்கெட்டுக்கு அனுகுல் ராயுடன் இணைந்து 180 பந்துகளில் 140 ரன்களும் சேர்த்தார். இந்த ஆறாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் இஷான் கிஷன் மட்டுமே 95 பந்துகளில் 93 ரன்களை விளாசினார்.
இதற்கு முன்பு, துலீப் கோப்பையில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஒருவரால் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ரன்களாக நமன் ஓஜாவின் சாதனையே நீடித்தது. 2014 ஆம் ஆண்டு மொஹாலியில் நார்த் ஜோனுக்கு எதிராக சென்ட்ரல் ஜோன் அணிக்காக விளையாடிய நமன் ஓஜா 217 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாக இருந்தது.
துலீப் கோப்பை தொடரில் அதிகபட்ச ரன்களைக் குவித்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களின் பட்டியலில், இஷான் கிஷனின் 250* ரன்கள் புதிய சாதனைக்கு அடுத்ததாக நமன் ஓஜா 217 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர்களைத் தொடர்ந்து, 1992-ல் சவுத் ஜோனுக்கு எதிராக நார்த் ஜோன் அணிக்காக விளையாடிய விஜய் யாதவ் 201 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், 1995-ல் வெஸ்ட் ஜோனுக்கு எதிராக ஈஸ்ட் ஜோன் வீரர் சபா கரீம் விளாசிய ஆட்டமிழக்காத 200 ரன்கள் நான்காவது இடத்திலும் உள்ளன. மேலும், 2025 ஆம் ஆண்டு பெங்களூரில் நார்த் ஜோனுக்கு எதிரான போட்டியில் சவுத் ஜோன் அணிக்காக தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் எடுத்த 197 ரன்கள் இப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் சவுத் ஜோனுக்கு எதிராக இஷான் கிஷன் எடுத்த 250 ரன்கள், துலீப் கோப்பை வரலாற்றில் ஒரு பேட்ஸ்மேனின் இணை 12-வது அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகவும் அமைந்துள்ளது. துலீப் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் அடித்த சாதனையை ராமன் லம்பா தன்வசம் வைத்துள்ளார்.
அவர் 1987-ல் பிலாயில் வெஸ்ட் ஜோன் அணிக்கு எதிராக நார்த் ஜோனுக்காக விளையாடி 320 ரன்கள் குவித்திருந்தார். இதற்கு அடுத்ததாக, 2001-ல் பனாஜியில் சவுத் ஜோனுக்கு எதிராக சென்ட்ரல் ஜோன் வீரர் ககன் கோடா ஆட்டமிழக்காமல் 300 ரன்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். 1994-ல் ரூர்கேலாவில் சவுத் ஜோனுக்கு எதிராக வெஸ்ட் ஜோன் வீரர் சுரேந்திர பாவே எடுத்த 292 ரன்கள் மூன்றாவது இடத்தில் உள்ளது.
1994 ஆம் ஆண்டு ரூர்கேலாவில் வெஸ்ட் ஜோனுக்கு எதிரான போட்டியில் சவுத் ஜோன் அணிக்காக விளையாடி ஆட்டமிழக்காமல் 250 ரன்கள் எடுத்திருந்த டபிள்யூ வி ராமனின் சாதனையை, தற்போது சென்னையில் நடைபெற்ற போட்டியில் ஈஸ்ட் ஜோன் அணிக்காக விளையாடிய இஷான் கிஷன் 250* ரன்கள் சமன் செய்து 12-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.