📅 Tuesday, 07 July 2026 IST | ஆனி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema June 27, 2026 10:01 PM

தமிழ் சினிமாவில் 50 வருட அனுபவம் கொண்டவர் பாக்யராஜ்

தமிழ் சினிமாவில் 50 வருட அனுபவம் கொண்டவர் பாக்யராஜ்

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது (73). தமிழ் சினிமாவில் இருபெரும் இயக்குநர்களான பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் ஆகியோர் சில தினங்களிலே அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

1977-ம் ஆண்டு சினிமா துணை இயக்குநராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கி நடிகர், இயக்குநர், எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல்துறை வித்தகராக திகழ்ந்தவர் பாக்யராஜ்.

மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, சின்ன வீடு, எங்க சின்ன ராசா என இவர் இயக்கி, நடித்த படங்கள் 1980-களில் வசூல் சாதனை படைத்தன

சாதாரண சாமானிய மனிதர்களின் எளிய எதார்த்தமான வாழ்வியலை, நகைச்சுவை மற்றும் குடும்பப் பின்னணியுடன் சுவாரசியமான திரைக்கதையாக மாற்றுவதில் பாக்யராஜ் வல்லவர். இதனால் இவரை "திரைக்கதை மன்னன்" என அன்போடும் அழைப்பர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களால் தனது "கலை உலக வாரிசு" என்றும் இவர் அறிவிக்கப்பட்டார்.

இதனிடையே, தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி கடந்த ஜனவரி மாதம் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாக்யராஜுடன் பணியாற்றிய திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு பாக்யராஜ் குறித்து பேசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்யராஜ் மறைவை அடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.