ரூ. 100 கோடி மோசடி: திமுக நிர்வாகி மீது குண்டர் சட்டம்
சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பி.டி. அரசகுமார்மீது தற்போது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
பதிவு செய்யப்படாத ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற அமைப்பை நடத்தி வந்த அரசகுமார், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பள்ளிகளுக்கான அங்கீகாரம், தரம் உயர்த்துதல், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) அனுமதி ஆகியவற்றைப் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார்.
அதை நம்பி பணம் கொடுத்த தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளி நிர்வாகிகளிடம், வேலையை முடித்துத் தராமலும் பணத்தைத் திருப்பித் தராமலும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரை அவர் மோசடி செய்துள்ளார்.
இதுதொடர்பாக மற்றோர் திமுக நிர்வாகியான இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அரசகுமாரை இரு வாரங்களுக்குமுன் கைது செய்தனர்.
அவரிடம் மூன்று நாள்கள் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், அவர்மீது மேலும் 50க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து புகார் அளித்தனர்.
அதன் காரணமாக, சென்னை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்படி, மோசடியில் ஈடுபட்ட அரசகுமார் தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.