மருத்துவர் குறிப்பின்றி மருந்து விற்பனை: சிசிடிவி கட்டாயம்
புதுடெல்லி: மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் கடைகளில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க சிசிடிவி கண்காணிப்பைக் கட்டாயமாக்க மத்தியச் சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது.
நாடு முழுவதும் அட்டவணை எச், எச்1, எக்ஸ் மருந்துகள் முறையான மருந்துச் சீட்டுகள் இல்லாமல் விற்பனையாவதாகப் புகார்கள் எழுந்தன.
ஒரு சில மருந்துக் கடைகள் மருத்துவரின் பரிந்துரையின்றித் தூக்க மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய மருந்துகள் போதைக்காகவும் உயிரை மாய்த்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுவதாகச் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால், மருந்து விநியோகத்தைக் கண்காணிப்பதை வலுப்படுத்துவதற்கான ஒரு கூடுதல் ஒழுங்குமுறை நடவடிக்கையாக இக்கட்டாய சிசிடிவி கண்காணிப்பு பரிந்துரைக்கப்படுகிறது.
இந்தப் பரிந்துரை குறித்துச் சம்பந்தப்பட்ட தரப்பினர், பொதுமக்களிடமிருந்து மறுப்புகளையும் ஆலோசனைகளையும் மத்திய அமைச்சு கோரியுள்ளது.
கருத்துகளையும் பரிந்துரைகளையும் சுகாதார, குடும்ப நல அமைச்சின் துணைச் செயலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மருந்துகள் குறித்த விளக்கம்
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அட்டவணை எச் மருந்துகள் என்பவை, பதிவுசெய்யப்பட்ட மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட செல்லுபடியாகும் மருந்துச்சீட்டின் மூலம் மட்டுமே விற்கக்கூடிய மருந்துகளாகும். அட்டவணை எச்1 என்பது அதன் துணைப் பிரிவாகும்.
அட்டவணை எக்ஸ் என்பது, குறிப்பிட்ட பழக்கத்தை உண்டாக்கும் மனோவியல், போதைப்பொருள்கள் போன்ற மருந்துகளை உள்ளடக்கியது.