“இதுதான் தமிழகத்தின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை!”
சென்னை: சென்னையில் தவெக பிரமுகர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை! என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில், “நாளை மாண்புமிகு முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார்.
அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை!
தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருத்துவதா?
இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா?
இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.