இங்கிலாந்தில் ஒழுக்கக்கேடு.. பாகிஸ்தான் அணியில் இருந்து 3 மூத்த வீரர்கள் நீக்கப்பட்ட பின்னணி!
இங்கிலாந்தில் ஒழுக்கக்கேடு.. பாகிஸ்தான் அணியில் இருந்து 3 மூத்த வீரர்கள் நீக்கப்பட்ட பின்னணி!
இஸ்லாமாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இதை அடுத்து அந்த அணியில் இருந்த 7 வீரர்கள் மற்றும் 2 பயிற்சியாளர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாதியிலேயே நீக்கியது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மூத்த வீரர்களான முகமது ரிஸ்வான், இமாம் உல் ஹக், சல்மான் அலி ஆகா ஆகியோர் திடீரென நாடு திரும்ப உத்தரவிடப்பட்டது. இவர்கள் மோசமான பார்ம் காரணமாக நீக்கப்பட்டதாக பலரும் நம்பிய நிலையில். அவர்களின் ஒழுங்கீனமான நடத்தையே இந்த அதிரடி முடிவுக்கு முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.
முகமது ரிஸ்வான் 4 இன்னிங்ஸ்களில் 61 ரன்கள் மட்டுமே எடுத்து பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்தார். இமாம் உல் ஹக் தசைப்பிடிப்பு என்ற பெயரில் லார்ட்ஸ் டெஸ்டில் ஆடாமல் தவிர்த்ததால் அவரது அர்ப்பணிப்பு கேள்விக்குறியானது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களின் போது நிகழ்ந்த அத்துமீறல்கள் குறித்து, இந்த 3 வீரர்களும் விசாரணைக் குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர்கள் மூவரும் என்ன தவறு செய்தார்கள்? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஆனால், முகமது ரிஸ்வான் மற்றும் இமாம் உல் ஹக் இனி பாகிஸ்தான் அணியில் இடம் பெறவே முடியாது எனவும், அவர்கள் இருவரும் சரியாக விளையாடாமல் நீண்ட காலமாக அணியில் இடம் பிடித்து வருவதால் இனியும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடியாது எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தோல்விகளை தொடர்ந்து பயிற்சியாளர் சர்பராஸ் நீக்கப்பட்டு மைக் ஹெசன் இடைக்கால டெஸ்ட் அணி பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். எட்ஜ்பாஸ்டனில் நடக்கும் 3வது டெஸ்டை இவர் மேற்பார்வையிடுவார். இவர் நிரந்தர பயிற்சியாளராக ஒப்புக்கொள்ளாவிட்டால், வரும் நவம்பரில் இலங்கை தொடருக்கு முன் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார்.
இதற்கிடையே தேர்வுக்குழு உறுப்பினர் மிஸ்பா உல் ஹக் தனது பதவியை ராஜினாமா செய்தார். தேர்வுக் குழு தலைவர் ஆகிப் ஜாவேத்தின் பதவியைப் பறிக்கவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி திட்டமிட்டுள்ளார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.