என் கேப்டன்ஷி பயணம் கசப்பாக தொடங்கியது! இப்போது மகிழ்ச்சி..கடைசி போட்டியில் அணியில் மாற்றம்
என் கேப்டன்ஷி பயணம் கசப்பாக தொடங்கியது! இப்போது மகிழ்ச்சி..கடைசி போட்டியில் அணியில் மாற்றம்-ஸ்ரேயாஸ்
டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது.
மூன்றாவது டி20 போட்டி டெல்லியில் வரும் வெள்ளிக்கிழமை சம்பிரதாய ஆட்டமாக நடைபெறுகிறது. ஸ்ரேயாஸ் டி20 கேப்டனாக தொடங்கியபோது, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த நிலையில் தற்போது ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை வென்று அசத்தியிருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "கடந்த இரண்டு போட்டிகளாக நாங்கள் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றோம். கடந்த போட்டியில் நாங்கள் வென்றால் கூட மிகப் பெரிய வெற்றியை நாங்கள் அனைவரும் எதிர்பார்த்து தான். இன்றைய ஆட்டத்திற்குள் வந்தோம்."
"அதற்கு சரியான எடுத்துக்காட்டாக இந்த போட்டி அமைந்தது. கேப்டனாக என்னுடைய பயணத்தை தொடங்கிய போது கசப்பான தொடக்கமாக தான் அது அமைந்தது. அதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. என்னுடைய பயணம் எப்போதுமே ஒரு ரோலர் கோஸ்டர் போல் தான் மேலே கீழே செல்லும்."
"ஆனால் ஒவ்வொரு நிலையிலும் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நமது தடத்தை நாம் எப்போதுமே இழந்து விடக்கூடாது. கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து யோசிக்க கூடாது. இதை நான் பல நேர்காணலில் தெரிவித்து இருக்கின்றேன். நிகழ்காலத்தில் என்ன இருக்கிறது தற்போதைய சூழல் என்ன இருக்கிறது என்பதை தான் புரிந்து கொள்ள வேண்டும்."
"மூன்றாவது போட்டியில் வாய்ப்பு இதுவரை கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க நாங்கள் முயற்சி செய்வோம். இதன் மூலம் பெஞ்சில் அமர்ந்திருக்கும் வீரர்களுக்கும் ஒரு நல்ல போட்டி கிடைக்கும். இதனால் எங்கள் அணியின் காம்பினேஷனை நிச்சயம் கடைசி போட்டியில் மாற்றுவோம்" என ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.