Con City Blue Sattai Maran Review
சென்னை: ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், வடிவுக்கரசி, பொன்வண்ணன், யோகிபாபு, தம்பி ராமையா, அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் கான் சிட்டி. நேற்று வெளியான அந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் ஓரளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் இந்தப் படம் குறித்து பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்.
தமிழில் வில்லன் நடிகராக அறிமுகமாகி இப்போது நல்ல பெயரை பெற்றிருப்பவர் அர்ஜுன் தாஸ். அவரது குரலுக்கென்றே பலரும் ரசிகர்களாக இருக்கிறார். அவர் இப்போது முக்கியமான ரோலை ஏற்றிருக்கும் திரைப்படம் கான் சிட்டி. இதில் அவருடன் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. நேற்று வெளியான இப்படத்தை ஹரிஷ் துரைராஜ் இயக்கியிருக்கிறார். ரசிகர்களிடம் ஓரளவுக்கு பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றிருக்கிறது.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: சூழல் இப்படி இருக்க பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இந்தப் படம் பற்றிய தனது விமர்சனத்தை யூடியூப் சேனலில் பகிர்ந்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "சதுரங்க வேட்டை, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை மனதில் வைத்துக்கொண்டு இந்தப் படத்தை செய்திருக்கிறார்கள். சதுரங்க வேட்டையை எடுத்துக்கொண்டால்; அந்தப் படத்தின் ஹீரோ ஒரு ஏமாற்றுக்காரராக இருப்பார். அவர் மற்றவர்களிடமிருந்து எப்படி தப்பித்தார் என்பது ரொம்பவே இன்ட்ரெஸ்ட்டிங்காக இருக்கும்.
ஒவ்வொரு விதம்: ஏமாற்றுவதும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி ஏமாற்றுவார். அதிலிருந்து அவர் தப்பிப்பதும் வேறு மாதிரிதான் இருக்கும். அடுத்து என்ன அடுத்து என்ன என இருக்கும். அதுமட்டுமின்றி அந்த ஹீரோ ஏமாற்றும் ஒவ்வொன்றும் அவ்வளவு டீட்டெயிலாக இருக்கும். உதாரணமாக அந்தப் பாம்பை வைத்து ஏமாற்றும் சீனை எடுத்துக்கொள்ளலாம். அதேமாதிரி கலசத்தை வைத்து ஏமாற்றும் சீனிலும் டீட்டெயிலாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தி ஈபி ஆஃபிஸில் வேலை பார்க்கிறார்.
ஹீரோ செய்வது: அங்கே பணம் கட்ட வரும் மக்களிடம் பணத்தை வாங்கி அரசாங்கத்துக்கு கொடுக்காமல் இவருடைய கல்லாவில் போட்டுக்கொள்வார். அப்படி ஒரு சீனோ அல்லது இரண்டு சீனோ வைக்கலாம். ஆனால் படம் முழுக்க பணம் கட்ட வருகிறார்கள். வாங்கி இவர் போட்டுக்கொள்கிறார். மீண்டும் ஏமாற்றுகிறார் ஏமாற்றுகிறார். ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார். ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்தார்கள். எப்போதான் முடிப்பீர்கள் என தோன்றிவிட்டது.
அதெல்லாம் பெரிய விஷயம்: அதுவும் இந்தக் கதை 15 வருடங்களுக்கு முன்பு நடப்பதாக காட்டுகிறார்கள். அப்போதெல்லாம் கரண்ட் பில் 500 ரூபாய் கட்டுவதே பெரிய விஷயமாக இருக்கும். அதுவும் கடைசி நேரத்தில் கூட்டமாக வந்துதான் கட்டுவார்கள். இந்தப் படத்திலோ டாஸ்மாக்கில் நிற்பது மாதிரி எப்போது பார்த்தாலும் கட்டிக்கொண்டே இருக்கிறார்கள். எதுவுமே நம்பகத்தன்மையோடு இல்லை. ஹீரோயினை ஏமாற்றுவதும் சரி, வடிவுக்கரசி, யோகிபாபு செய்வதும் சரி நம்பும்படியே இல்லை. அதேபோல் காமெடி என்ற ஒன்றை செய்து வைத்திருக்கிறார்கள். அதை பார்த்தால் சிரிப்பும் வரவில்லை.
வில்லனும் ஸ்ட்ராங் இல்லை: படத்தில் வில்லன் கேரக்டரை வடிவமைத்திருக்கிறார்கள். அதெல்லாம் சுத்தமாக ஸ்ட்ராங்காகவே இல்லை. எடுத்துக்கொண்ட கதையில் சுவாரஸ்யம் இருக்கிறது. ஆனால் அதை அவர்கள் சரியாக செய்யவில்லை. பொதுவாக ஏமாற்றுவது தவறு என்றுதான் எல்லா கதைகளும் சொல்லும். இந்தக் கதையோ ஏமாறுவதும் தவறு என்று சொல்கிறது. அதற்கு பிறகு நீங்களே ஒரு நல்ல முடிவாக எடுத்துக்கொள்ளுங்கள்" என்றார்.