"சிறையிலேயே இறந்துவிடுவாரோ என பயமாக இருக்கு".. இம்ரான் கானுக்காக களமிறங்கிய 7 ஆஸ்திரேலிய கேப்டன்கள்
"சிறையிலேயே இறந்துவிடுவாரோ என பயமாக இருக்கு".. இம்ரான் கானுக்காக களமிறங்கிய 7 ஆஸ்திரேலிய கேப்டன்கள்
சிட்னி: பாகிஸ்தானின் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான இம்ரான் கானின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், பாகிஸ்தான் அரசுடன் தூதரக ரீதியாகப் பேசி அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் 7 முன்னாள் கேப்டன்கள் அந்நாட்டு வெளியுறவு அமைச்சருக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்களான கிரெக் சேப்பல், ஆலன் பார்டர், ஸ்டீவ் வா, இயன் சேப்பல், மார்க் டெய்லர், கிம் ஹியூஸ் மற்றும் பெலிண்டா கிளார்க் ஆகிய 7 பேரும் இணைந்து ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங்குக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர். கிரெக் சேப்பல் அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசவும் நேரம் கேட்டுள்ளார்.
இது குறித்துப் பேசிய கிரெக் சேப்பல், "இம்ரான் கான் சிறையிலேயே இறந்துவிடுவாரோ என்று நாங்கள் மிகவும் அஞ்சுகிறோம். 1992-ல் உலகக் கோப்பை வென்று தந்து, பின்னர் ஏழைகளுக்காகப் புற்றுநோய் மருத்துவமனைகளையும் கட்டிய ஒரு மாபெரும் வீரருக்குச் சிறையில் அடிப்படை மருத்துவ வசதிகள் மற்றும் குடும்பத்தினரைச் சந்திக்கும் உரிமை கூட மறுக்கப்படுகிறது. அரசியல் காரணங்களைத் தாண்டி, ஒரு சக மனிதனாக அவருக்கு உரிய மனிதாபிமான சிகிச்சை கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
கடந்த 2023 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 73 வயதான இம்ரான் கானின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே இந்திய ஜாம்பவான்கள் கபில்தேவ், சுனில் கவாஸ்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்கள் மைக்கேல் ஹோல்டிங், பிரையன் லாரா உள்ளிட்ட 21 சர்வதேச முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவின் 7 முன்னாள் கேப்டன்களும் ஒன்று திரண்டு இம்ரான் கானுக்காக ஆஸ்திரேலிய அரசிடம் முறையிட்டுள்ளது சர்வதேச அளவில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.