📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 15, 2026 07:34 AM

சிங்கப்பூரின் 5 வட்டாரங்களிலும் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது

சிங்கப்பூரின் 5 வட்டாரங்களிலும் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது

சிங்கப்பூரின் அனைத்து வட்டாரங்களிலும் காற்றுத் தரம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) அதிகாலையில் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.

காலை 6 மணி அளவில், வடக்கு (104), தெற்கு (111), கிழக்கு (128), மேற்கு (128), மத்திய (154) வட்டாரங்களின் 24-மணி நேர காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு ஆரோக்கியமற்ற வரம்பில் இருந்தன.

காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 101 முதல் 200 வரை இருந்தால் அது ஆரோக்கியமற்ற வரம்பைக் குறிக்கிறது. குறியீடு இத்தகைய நிலையை எட்டும்போது பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் அறிவுறுத்துகிறது.

51 முதல் 100 வரையிலான குறியீடு மிதமானதாகவும் 0 முதல் 50 வரையிலான குறியீடு, ‘நல்ல’ வரம்பில் இருப்பதாகவும் கருதப்படுகின்றன.

பல நாள்களாக மிதமான வரம்பில் இருந்த சிங்கப்பூரின் காற்றுத் தரம், செப்டம்பர் 14ஆம் தேதி வட பகுதியைத் தவிர தீவின் மற்ற வட்டாரங்களில் ஆரோக்கியமற்ற நிலையை அடைந்தது.

சுற்றுப்புற வாரியம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அடுத்த 24 மணி நேரத்திற்கான காற்றின் தரம் மிதமான நிலையிலும் ஆரோக்கியமற்ற வரம்பின் கீழ் மட்டத்திலும் இருக்கும் என்று முன்னுரைத்திருந்தது.

கலிமந்தானில் ஏற்படும் தீச்சம்பவங்களில் மிதமானது முதல் அடர்த்தியானது வரையிலான புகை தொடர்ந்து காணப்படுவதாகவும் சிங்கப்பூரை நோக்கி அது நகர்வது தென்படுவதாகவும் வாரியம் கூறியது.