சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்.. சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் விஜய்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்.. சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் விஜய்!
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோரி சட்டசபையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அதில் தமிழில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள், ஆவணங்கள் மற்றும் வாதங்களுக்கு உரிய நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் விஜய் வசமுள்ள காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மீதான மானியக் கோரிக்கை நடைபெறுகிறது. அதேபோல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதமும் நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக கேள்வி நேரம் முடிவடைந்த பின், முதல்வர் விஜய் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோரி சட்டசபையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அதன்படி விஜய், உலகின் தொன்மையான மொழி என்றால் அது தமிழ் மட்டுமே.. உலகம் முழுவதும் 9 கோடி மக்களால் தமிழ் மொழி பேசப்பட்டு வருகிறது. தமிழை தாய்மொழியாக கொண்டிருப்பது நமக்கு கிடைத்த பெருமை. தமிழை வெறும் மொழியாக கருதுவதில்லை. அது நமது உயிரோடு கலந்து அடையாளம். தமிழ் என்று வந்துவிட்டால், ஒரு வேகம் பிறக்கிறது.
தமிழ் நமது அலுவலக பயன்பாட்டில் மட்டுமின்றி ஆட்சி, கல்வி, தொழில்நுட்பம், அறிவியல், மாவட்ட நீதிமன்றங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் மொழிக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து கொடுத்துள்ளது. தமிழை வளர்ப்பதும், பாதுகாப்பதும் மட்டுமல்லாமல் எதிர்கால தலைமுறைக்கு கொண்டு செல்வதும் நமது பொறுப்பாகும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மையாக மொழியாக அங்கீகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலம் பயன்பாட்டு மொழியாக இருந்து வருகிறது. ஒரு மாநில ஆளுநர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அந்த மாநில ஆட்சி மொழியை உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் பயன்படுத்த அதிகாரம் வழங்க முடியும்.
ஆட்சி மொழிகள் சட்டப்படி மாநில ஆளுநர் குடியரசுத் தலைவர் ஒப்பிதலுடன் மாநில ஆட்சி மொழியை ஆங்கிலத்துடன் கூடுதலாக உயர்நீதிமன்ற தீர்ப்புகள், தீர்ப்பாணைகளில் பயன்படுத்த அதிகாரம் வழங்க வழிவகுக்கிறது. அதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாகவும், ஆங்கிலத்திற்கு சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கருதுகிறோம்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி சட்டசபையில் 6.12.2006ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முன்மொழியை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இதனால் மத்திய அரசு மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலம், மாறுகிறது, தொழில்நுட்பம் மாறுகிறது.. தமிழில் சட்டப்படி தொடங்கி தீர்ப்புகள் வரை மொழிபெயர்ப்புகள் பெருமளவில் வளர்ந்துள்ளன.
இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். நீதிமன்றத்தில் தங்கள் வழக்கில் என்ன நடக்கிறது என்பதை சாமானிய மக்களும் தாய்மொழியில் அறிய வேண்டும். நீதியின் மொழி மக்களுக்கு புரியும் மொழியாக இருக்க வேண்டும். மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் பயன்படுத்தப்படும் நிலையில், அதனை சென்னை உயர்நீதிமன்றத்தில் விரிவுப்படுத்த வேண்டும். அது இயல்பான அடுத்தக்கட்டம்.
தமிழ் மொழியை சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டும். தமிழில் மனுக்கள், ஆவணங்கள் மற்றும் வாதங்களை சமர்ப்பிக்க உரிய நடைமுறையை உருவாக்க வேண்டும். தீர்ப்புரைகள், உத்தரவுகளை அதிகாரப்பூர்வமாக தமிழில் வழங்கும் அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்கான பயிற்சியை ஏற்படுத்த வேண்டும்.
இது எந்த மொழிக்கும் எதிரான கோரிக்கை அல்ல.. இது ஆங்கிலத்தை அகற்றும் கோரிக்கை அல்ல. இது தமிழுக்கு உரிய அரசியலமைப்பு சட்ட வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை. இந்த நடவடிக்கையை மத்திய அரசு, குடியரசுத் தலைவரும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று முன்மொழிவதாக தெரிவித்தார்.