அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி இளையர் உயிரிழப்பு
செங்கல்பட்டு: தமிழக அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்தக் கார் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளையர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர், செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார்.
16 வயதான இவரது மகன் இறையன்பு, திங்கட்கிழமை (செப்டம்பர் 7) அதிகாலை 12:30 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் காட்டாங்கொளத்தூர் சந்திப்புச் சாலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ராஜபாளையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அமைச்சரின் வாகன அணிவகுப்பைத் தொடர்ந்து வந்த அவரது சொந்தக் கார், எதிர்பாராதவிதமாக இறையன்புவின் இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது.
தூக்கி வீசப்பட்ட இறையன்பு, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டிவந்த சின்ன அக்னி (28) என்பவர் கைது செய்யப்பட்டார்.