“வைபவ் சூர்யவன்ஷிக்கு ஓய்வே கொடுக்க வேண்டாம்.. 2027 உலகக்கோப்பையில் ஆடணும்”.. சிவராமகிருஷ்ணன் பேச்சு
“வைபவ் சூர்யவன்ஷிக்கு ஓய்வே கொடுக்க வேண்டாம்.. 2027 உலகக்கோப்பையில் ஆடணும்”.. சிவராமகிருஷ்ணன் பேச்சு
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமாகி 15 வயதில் புதிய சாதனை படைத்துள்ள இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷிக்கு, வரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் அதிரடி யோசனை தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில், சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக ஆடும் லெவனில் சேர்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி தனது 15 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமானார். இதன் மூலம் 16 வயதில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, மிகக் குறைந்த வயதில் இந்திய அணியில் விளையாடிய வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். ஆனால், இப்போட்டியில் 10 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றத்தை அளித்தது.
இது குறித்துப் பேசிய லட்சுமண் சிவராமகிருஷ்ணன், "ஒருமுறை அவரை விளையாட வைக்க முடிவு செய்துவிட்டால், அவருக்குத் தொடர்ந்து போதுமான வாய்ப்புகளை வழங்க வேண்டும். அவர் அடுத்த 20 ஆண்டுகளுக்கான இந்திய கிரிக்கெட்டின் முக்கிய முதலீடு. அவருக்குத் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் முழு ஆதரவு அளிக்க வேண்டும். ஒரு சில போட்டிகளில் அவர் சரியாக விளையாடாவிட்டாலும் அவரை அணியிலிருந்து நீக்கக் கூடாது" என்றார்.
மேலும் பேசிய சிவராமகிருஷ்ணன், "அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீச்சாளர்களைப் போன்ற உடற்தகுதி தேவையில்லை என்பதால், அவர் ஆண்டு முழுவதும் தொடர்ந்து விளையாடலாம். நீண்ட நேரம் பேட்டிங் செய்வது அவரது மனவலிமையையும் கவனத்தையும் அதிகரிக்கும்" என்று கூறினார்.
வரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை குறித்துப் பேசிய அவர், "டி20 போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாகச் செயல்பட்டால், அவருக்கு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் நிச்சயம் வாய்ப்பளிக்க வேண்டும். அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் இந்தியாவின் முக்கிய மேட்ச்-வின்னராக உருவெடுப்பார்" என்று சிவராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.